நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது. நாளை மறுநாள் முதல் மே 7ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் திருத்தம் மேற்கொள்ள 5 நாள் அவகாசம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்விற்கான அட்டவணையை தேசிய தேர்வாணையம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 16 லட்சத்து 14 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







