குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டுயானை சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப பலா பழங்கள் அதிகமாக காய்த்துள்ளன. இதனை ருசிக்க சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் குன்னூர் பகுதிக்கு படையெடுத்துள்ளன.
அடிக்கடி தண்ணீர் மற்றும் பலா மரங்களை தேடி யானைகள் சாலையை கடந்து வருகின்றன. வனத்துறையினர் யானைகளை கண்காணித்து அவை சாலையை கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி அவற்றை பாதுகாப்பாக சாலையை கடக்க வழிவகை செய்து வருகின்றனர்; இருப்பினும் யானைகளைக் கண்டதும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் யானைகளை புகைப்படங்கள் எடுக்க அருகில் செல்கின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் மலைப்பாதையில் கேஎன்ஆர் அருகே யானை ஒன்று சாலையை கடந்து சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றபோது ஆக்ரோஷமாக யானை அவர்களை விரட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ரெ. வீரம்மாதேவி








