நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தினை 5-2-2022 (சனிக்கிழமை) அன்று காலை 11.00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டியுள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சியிலிருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டு, பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (3-2-2022) அன்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நீதியரசர் ஈஸ்வரய்யா, AIOBC கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, BAMCEF அமைப்பின் பி.டி.போர்கர், PAGAAM அமைப்பின் நிறுவனர் தஜிந்திர் சிங் ஜல்லி, சாமாஜிக் சேத்னா அமைப்பின் நிறுவனர் முன்னாள் நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், லீட் இந்தியா அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹரி எப்பனப்பள்ளி ஆகிய சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இன்று (04-02-2022) அவர் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







