துருக்கியில் நடந்த பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் வென்று சென்னை திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
துருக்கி இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட சென்னை வீரர் நவீன் 93 கிலோ எடைப்பிரிவு, 330 கிலோ ஸ்குவாட் பிரிவு, 182 கிலோ பெஞ்ச்பரஸ் பிரிவு மற்றும் 305 கிலோ டெட்லிப்ட் பிரிவில் போட்டியிட்டார். இந்த நான்கு போட்டிகளிலும், 3 தங்கப்பதக்கமும் 1 வெண்கலப்பதக்கமும் அவர் வென்றார். இதையடுத்து துருக்கியிலிருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்த நவீனுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நவீன், இந்தியாவிலிருந்து பளு தூக்கும் போட்டியில் 64 பேர் கலந்து கொண்டதாகவும், தமிழகத்திலிருந்து 28 பேர் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். இதில் 12 பேர் வரை பதக்கம் வென்றதாகவும் அவர் கூறினார். மேலும், தான் 2022ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று பதக்கம் பெறுவேன் எனவும் அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வி மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறி விளையாட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்.







