கோவளத்தில் கடலில் மூழ்கிய கடற்படை அதிகாரி உடல் 18 மணி நேரத்திற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டு பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி ராஜாராம் என்பவரின் மகன் சுரேஷ் 36. இவர் டெல்லி இந்தியக் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 8 வயது மகளும் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் கடந்த வாரம் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக விடுமுறையில் டெல்லியிலிருந்து சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். பின், மனைவி, குழந்தை, மாமனார் என குடும்பத்துடன் நேற்று கோவளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மாலை 5:00 மணிக்கு, கோவளம் கடற்கரை, சர்ஃபிங் பாயின்ட் அருகே சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதில் அவரது மகள் கடலில் குளிக்க ஆசைப்பட்டதால் மகளுக்காக கடலில் இறங்கி விளையாடினர். பின்னர் மகளை கரையில் விட்டுவிட்டு மீண்டும் சுரேஷ் மட்டும் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கினார். உறவினர் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் மற்றும் கோவளம் கடலோர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மதியம் வரை கப்பல் படையினர் மூன்று ரோந்து கப்பல் மூலமும், விமானப்படையில் ஒரு ஹெலிகாப்டர் மூலமும் தேடப்பட்டது. சுரேஷ் மாமனார் லட்சுமி நாராயணன் கொடுத்த புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வந்தனர்.
ஒருபுறம் விமானப்படை, கடற்படையினர் சுரேஷை தேடும்பணியில் ஈடுபட மறுபுறம் கோவளம் மீனவர்களும் சுரேஷை தேடினர்.
இந்த நிலையில் இன்று மதியம் 1:00 மணிக்கு சுரேஷ் உடல் மாமல்லபுரம் அருகே புலிகுகை பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதை மீனவர்கள் கண்டறிந்தனர். பின்னர் கோவளம் மீனவர்கள் சுரேசின் உடலை மீட்டு மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் மேடவாக்கத்தில் உள்ள ராஜராமின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. விடுமுறை முடிந்து பணிக்கு இன்று டெல்லி திரும்ப வேண்டிய நிலையில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.