உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை வெற்றிகரமாக நாசா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சிகளில் தொலைநோக்கிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. தொலைநோக்கிகளைக் கொண்டு தான் நாம் விண்ணில் உள்ள புதிய கோள்கள், புதிய நட்சத்திரங்கள் போன்றவற்றை அறியமுடிந்தது. விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளைப் பல நாடுகள் மேற்கொண்டு வரும் இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, மற்றொரு மைல் கல் சாதனையாக உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணிற்கு அனுப்பி அசத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாசா உடன் ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கி உள்ளது. இந்த தொலைநோக்கியை கடந்த 24ஆம் தேதி விண்ணிற்குச் செலுத்தப்படவிருந்த நிலையில், மோசமான வானிலை நிலவியதால் நேற்று விண்ணுக்குச் செலுத்தியது நாசா. பிரான்சின் கயானா பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி ஆய்வுக் கூடத்திலிருந்த முன்னாள் உயர் அதிகாரியான ஜேம்ஸ் எட்வின் வெப்பின் பெயரை இந்த தொலைநோக்கிக்குப் பெயராகச் சூட்டியுள்ளனர். நாசா இந்த தொலைநோக்கியை 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதன் எடை கிட்டத்தட்ட 6,000 கிலோ ஆகும். மேலும் இதன் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய தொலைநோக்கி இது எனப் விஞ்ஞானிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களைத் தெளிவாக ஆய்வு செய்யத் திட்டமிட்டு நாசா ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது. மேலும் இந்த தொலைநோக்கியை நிலையான சுற்று வட்டப் பாதையில் கொண்டு சேர்த்து விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்கள் நாசாவிற்க்கு கொண்டு வரும் பணியைத் தொடங்க இன்னும் 30 நாட்கள் ஆகும் என்றும், பிரபஞ்சத்தில் கருந்துளை (Black Hole) போன்ற பல அறியப்படாத ஆச்சரியங்களை இந்த தொலைநோக்கியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.