தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது. நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என அதில் அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இத்திட்டத்தில் கட்டலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளையும் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊரகப்பகுதிகளில் கோரிக்கைகள் அதிகளவு வரப்பெற்றால் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.








