நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ள காலபைரவர் ஆலயத்தில் நடைபெற்ற வளர்பிறை அஷ்டமி விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும், மாசி மாதத்தில் வளர்பிறை அஷ்டமி விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதையும் படியுங்கள் : ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
இந்த வருடம், அஷ்டமியானது வளர்பிறையில் வருவது சிறப்பானதாகும். இதனை முன்னிட்டு அணியாபுரத்தில் அமைந்துள்ள மூலவர் பைரவி சொர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் உற்சவ கால பைரவருக்கு சிறப்பு அபிசேகங்கள் நடத்தப்பட்டன. பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், பச்சரிசி மாவு கரைசல், நெல்லி பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் மற்றும் சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்ட பைரவருக்கு, வண்ண நறுமலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. மேலும், பஞ்ச தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கால பைரவரை தரிசனம் செய்தனர்.
– கு.பாலமுருகன்







