சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக அந்த படத்தின் குழுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு படத்தின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டிருந்தது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் இதுவாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரை டேக் செய்து பாரட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். சிரஞ்சீவி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் “இது ஒரு வரலாற்று வெற்றி. படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.