என் மகளுக்கு கிடைத்த ஆஸ்கர் ! ‘எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படத்தில் யானைகளை பராமரித்த பெள்ளி அம்மாள் பெருமிதம்

எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்காக கார்திகி குன்செல்வெஸ் இன்று பெற்றுள்ள ஆஸ்கர் விருது, தன் மகள் பெற்ற விருது என அப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகு ,பொம்மி ஆகிய யானைகளை பராமரித்து வந்த பெள்ளி அம்மாள் பெருமிதம்…

எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்காக கார்திகி குன்செல்வெஸ் இன்று பெற்றுள்ள ஆஸ்கர் விருது, தன் மகள் பெற்ற விருது என அப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகு ,பொம்மி ஆகிய யானைகளை பராமரித்து வந்த பெள்ளி அம்மாள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகமாக நடைபெற்றது. வண்ணமயமான அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றனர்.

இதேபோல், முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கும், பாகன்களுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவண குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படமும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இந்த நிலையில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளை பராமரித்து வந்தவர்கள் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது கிடைத்ததற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்திகி குன்செல்வெஸ் என்ற பெண்மணி, எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என்ற ஆவண குறும்படத்தை எடுத்தார். இப்படத்தினை youtube மற்றும் Net Flix OTT தளத்தின் மூலம் வெளியிடப்பட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் படம் வெளிவந்த புதிதில் வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர், பாகன்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆவண படம் ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெற்றது. முதற்கட்டமாக சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த ஆவணப்படம் உட்பட 10 பிரிவுகளுக்கான பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிடப்பட்டது.

இதில் முதுமலையில் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும் அதன் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு தேர்வான நிலையில் இப்படம் சிறந்த ஆவண
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் குட்டி யானைகளை பராமரித்து வந்த பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மட்டுமல்லாமல் வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ரகு மற்றும் பொம்மி ஆகிய இரண்டு குட்டி யானைகளையும் வேறு பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும்
முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு மற்றும் பொம்மி யானைகளை கண்ட பெள்ளி அம்மாள் கண் கலங்கினார். இதையடுத்து ஆவண திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரகு மற்றும் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வந்ததாகவும், காயங்களுடன் வந்த குட்டியானைகளுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கி பாதுகாத்ததாகவும் கூறினார்.

மேலும், கொரோனா காலகட்டத்திற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதாகவும், குட்டி யானைகளுடன் தாங்கள் இருப்பதை படமாக்கிய நிலையில் அப்படம் ஆஸ்கர் விருது பெற்றது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எலிபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்திற்காக கார்திகி குன்செல்வெஸ் பெற்ற ஆஸ்கர் விருது, தன் மகள் பெற்ற விருது என ரகு மற்றும் பொம்மி யானையை பராமரித்து வந்த பெள்ளி அம்மாள் பெருமிதம் கொண்டார்.

மேலும் இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ஆசியாவின் மிகப் பழமையான யானைகள் முகமான தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு ஆஸ்கார் விருது மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தாயை பிரிந்த ரகு மற்றும் பொம்மி ஆகிய இரு குட்டி யானைகளை வனத்துறை சார்பில் பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி மற்றும் குட்டி யானைகள் இடையேயான பிணைப்பை
வெளிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம் மூலம் பழங்குடியினரின் சிறப்பான பணிகள் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது, வனத்துறை மட்டுமல்லாமல் பழங்குடியினருக்கு ஊன்று கோளாக அமைந்துள்ளது என கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.