வீரபாகு, நவ வீரர்கள் படைசூழ சூரர்களை வதம் செய்த முருகன் – பழனியில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த2ஆம்…

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று
நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த
2ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய
நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைப்பெற்றது. பிற்பகல் நேரத்தில்
மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக் குமாரசாமி, மலைக்கொழுந்து
அம்மனிடம் சக்திவேல் வாங்கி வந்தார்.

தொடர்ந்து வீரபாகு, நவ வீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும், சக்திவேல் கொண்டு முருகன் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போரில் சூரர்களை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்ற சண்முகருக்கும் -வள்ளி, தெய்வானைக்கும் நாளை பழனி மலைக்கோயிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறு உள்ளது. தொடர்ந்து கந்தசஷ்டி திருவிழாவில் 7 நாட்களாக உணவருந்தாமல் கடும் விரதமிருந்து வழிபாடு செய்த பக்தர்கள் நாளை திருமண வைபவம் முடிந்ததும், உணவருந்தி தங்களது சஷ்டி விரதத்தை நிறைவு செய்வர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.