முலாயம் சிங் யாதவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால்…

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவன தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22ல் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முலாயம்சிங் உடல்நிலையில் கடந்த 3-ம் தேதி முதல் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது. பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழு முலாயம் சிங் யாதவுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருந்து வருவதாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.