அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக அதன் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுபினர் கருணாஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணயில் திருவாடானை தொகுதியை ஒதுக்கி முக்குலத்தோர் புலிப்படைக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் அங்கீகாரம் அளித்ததாக தெரிவித்தார்.
முக்குலத்தோருக்கான இடஒதுக்கீடு குறித்து, ஜெயலலிதாவிடம் தாம் கோரிக்கை வைத்ததாகவும் தமது 12 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறந்தள்ளி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகியது எனக் கூறிய அவர், அதிமுகவுக்கு எதிராக முக்குலத்தோர் புலிப்படை வேலை செய்யும் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.







