நில முறைகேடு விவகாரம் | #CMSiddaramaiah வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

MUDA நில முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையா…

MuduScam ,Karnataka ,CMSiddaramaiah ,KarnatakaHighCourt ,ThawarChandGehlot

MUDA நில முறைகேடு புகாரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பாஜக ஆட்சியில் கடந்த 2021ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கோரி சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், சினேகமயி கிருஷ்ணா, பிரதீப்குமார் ஆகியோர் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அந்த மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ஆளுநர் நோட்டீஸ் அனுப்பினார்.

கர்நாடக சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு, சித்தராமையாவுக்கு அனுப்பிய நோட்டீசை ஆளுநர் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டசபையின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர், கடந்த மாதம் 17ம் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தியது. இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா, தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கடந்த மாதம் 19-ம் தேதி கர்நாடக உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. பெங்களூரு சிறப்பு உயர்நிதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அந்த தடை தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்…ஏமாற்றம் இருக்காது…” – முதலமைச்சர் #MKStalin

நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் ஆளுநர் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சித்தராமையா சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ரவிவர்மா குமார், அட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். கடைசியாக இந்த வழக்கின் விசாரணை கடந்த 12-ந் தேதி நடைபெற்றது. அன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் இன்றைய விசாரணை நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிவில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.