விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை உலக தமிழ் சங்கத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப்…

விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் வேளாண்மைத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர்
நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான
விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான
கூட்டம் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில்
நடைபெற்றது.  கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், “மதுரை மாவட்டத்தில் கூடுதல் மழை பெய்த காரணத்தால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது. பெரியார், வைகை அணையில் இருந்து நீர் வருவதால் மதுரை மாவட்டத்தில் கூடுதல் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஏழைகள் உணவாக இருந்த சிறுதானிய உணவு வகைகள் தற்போது வசதியான மக்கள் சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது எனில் அந்த பொருட்களுக்கு உள்ள மதிப்பு அதிகரித்து உள்ளது.  அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை 2006ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், 2011 வரை சிறப்பாக இயங்கி வந்த ஆலை, கடந்த ஆட்சியாளர்களின் தவறான செயல்பாடுகள் காரணமாக ஆலை இயங்காமல் உள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளில் வேறு வேறு தொழில்கள் செய்பவர்கள் கூட வேளாண் துறைக்கு வந்து விடுவார்கள்” என்றார்.

வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “மக்கள் உயிர் வாழ்வதற்கு விவசாயம் மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. கொரோனா
காலகட்டத்திலும் தங்களின் உயிரை துச்சமென நினைத்து விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். கொரானா காலகட்டத்தில் விவசாயப் பணிகள் நடைபெறாமல் இருந்தால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும். வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட் போடப்பட்டதால் கூடுதல் நிதி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 46 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மைத் துறை சாதனை படைத்துள்ளது. வேளாண்மைத் துறையில் விரைவில் புரட்சி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளன. விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்கள் விவசாய மதிப்புக் கூட்டு பொருட்களை சந்தைப்படுத்த முன்வர வேண்டும். வேளாண்மைத் துறை திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். விவசாயிகளை வேளாண் வணிகர்களாக தொழில் அதிபர்களாக மாற்ற வேண்டும் என்றார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்மைத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், பாரம்பரிய நெல் வகைகளை உற்பத்தி செய்ய முதலில் தைரியம் வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. ரசாயன உரத்தை குறைத்து இயற்கை உரத்தைப் பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.