பொது மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை பெற்று மோசடி
செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய பொருளாதார
குற்றப்பிரிவு போலீசாருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகம் முழுவதும் 13 இடங்களில் கிளைகளை தொடங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி, 1,678 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவ்வாறு வசூலித்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்ப கொடுக்காமல்
மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தானாக
முன்வந்து ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற
பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
ராஜசேகர், ஜெய்கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மனுதாரர்கள் தரப்பில், டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கி
வருவதாகவும், வழக்கு பதிவு செய்த பின்னர் வங்கி கணக்குகள் முடக்கபட்டுவிட்டதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித்தர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தைத் திரும்பத் தர தயாராக இருப்பதால்,
முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், பணத்தை திருப்பித் தருவார்கள் என்ற உத்தரவத்தை நம்ப
முடியாது எனவும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை விடுவித்தால் பணத்துடன்
தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நிர்வாக இயக்குனர் ராஜசேகர் உட்பட 5 பேரையும் ஆகஸ்ட் 8ம் தேதி
வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின்
அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற கூடாது எனவும், முடக்கப்பட்ட வங்கி
கணக்கை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.
காவல்துறை விசாரணை முடியும் வரை மேற்கொண்டு யாரிடமும் டெபாசிட் மேற்கொள்ள
கூடாது என ஆருத்ரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, டெபாசிட்தாரர்களுக்கு
பணம் திருப்பி அளிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக உள்துறை செயலாளருக்கு உதவியாக
மாவட்ட வருவாய் அதிகாரியையும் நியமித்துள்ளார்.
பணத்தைத் திருப்பி வழங்கியது தொடர்பாக ஆகஸ்ட் 8 ம் தேதி வரை வாரந்தோறும்
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு
தள்ளி வைத்தார்.