இப்போலாம் எங்கே பார்த்தாலும் ஹெல்மெட் போடவில்லை என்றால், 1000 ரூபாய் ஃபைன் போடுகிறார்கள். சரினு ஹெல்மெட் போட்டு கொண்டு தியேட்டருக்கு போனால், ”தலைக்கவசமும் 4 நண்பர்களும்னு” ஒரு படம் ஓடியது. சரி பார்க்கலாம் என சென்று சில்லரையை சிதறவிட்ட படத்தின் விமர்சனம்.
வைரங்கள் பதுக்கி வைத்த தலைக்கவசம் 4 இளைஞர்களிடம் கிடைக்கிறது. அதனை அறியாமல் பயன்படுத்தும் இவர்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். பிறகு என்ன நடந்தது..? வைரத்திற்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தை ரம்யா கிருஷ்ணன், கிரன் உட்பட பல பிரபல நடிகைகளை வைத்து குடும்ப படங்களை இயக்கி பெரும் சாதனை படைத்த இயக்குநர் சுந்தர்சியின் உதவி இயக்குநரான வி.எம்.ரத்தினவேல் இயக்கியுள்ளார். பொதுவாக இயக்குநர்கள் ஹீரோ அல்லது ஹீரோக்களின் தந்தையாகவே நடிப்பார்கள். ஆனால் வித்தியாசம் காட்ட அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் நாயகனாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். முக்கோண காதலில் சிக்கி கொள்ளும் நாயகனுக்கு மூன்று நண்பர்கள். புது முகங்களான ராஜேஷ், ஸ்ரீஜித், விக்கிபீமா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் வருமானத்தில் ஒரு பங்காக தனது பகுதி முதியவர்கள் மற்றும் மாணவர்களின் படிப்பு செலவுக்கு கொடுத்து உதவுகின்றனர்.
முதல் பாதி முழுவதும் ஆழமான காதலை மையப்படுத்தி காட்சிகள் அமைத்து, இரண்டாம் பாதியில் காதலை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி, கதாநாயகியை மறக்கும் அளவுக்கு கதைக்குள் நம்மை இழுத்து செல்கிறார் இயக்குநர். சீனு ஆதித்யா ஒளிப்பதிவில் சற்று தொய்வு இருந்தாலும், அரும்பாரதியின் வரிகளில் ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும் அதன் காட்சிகளும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.
முதல் பாதியின் நீளம் அதிகம் என்பதால் தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கலாம். தமிழ் சினிமாவில் சேரி, குப்பம் என்றாலே கொலை, கொள்ளை என காட்சிப்படுத்தப்படும். ஆனால் இக்கதையில் 4 இளைஞர்கள் நன்றாக படித்து முன்னேறி, தங்கள் பகுதியை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கின்றன. சிறிய பட்ஜெட் படம் என்பதால் படத்தின் தரம் குறைந்து சீரியல் பார்ப்பது போல் உள்ளது. ஆனால் கதையில் கூறவரும் செய்தி உணர்ந்து அதற்குள் சென்று விட்டால், அவை பெரிய குறையாக தெரியாது. இயக்குநர் ரத்தினவேலின் புத்திசாலித்தனம் இத்திரைப்படத்தில் பிரமாதம்.
நாயகிகளாக ரேணுகா பதுளா மற்றும் ஸ்வேதா டாரதி இடைவேளை வரை மட்டுமே நடித்து இருந்தாலும், பல இடங்களில் கண் கவரும் காட்சிகளில் மனதை கொள்ளை அடிக்கின்றனர். அவர்களை மேலும் பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அரசியல்வாதியாக ஓஏகே.சுந்தர் கலக்கியுள்லார். மற்ற கதாபாத்திரங்களில் தினேஷ், வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், போலீஸ் மணிமாறன் என சிறிய பட்டாளம் உண்டு.
சில காட்சிகள் தற்பொழுது உள்ள அரசியல் மற்றும் கிசுகிசு வட்டாரங்களை சற்று தொட்டு செல்கிறது. மற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து இந்தபடம் எப்படி வித்தியாசபடுகிறது என்றால், கிடைத்த பொருளை எப்படி தங்களது சுய லாபதிற்க்காக உபயோகிக்கிறார்கள் என இருக்கும். ஆனால் இதுவோ, எப்படி தங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போராடுகிறார்கள் என மிகவும் அழகாக கூறியுள்ளார்கள். இந்த படம் பார்க்கும் பொழுது, ப்ரித்வி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான மலையால திரைப்படமான “கோல்ட்” உங்களுக்கு நியாபகம் வரலாம்.
– பிரவீன், நியூஸ் 7 தமிழ்