திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடன் தொல்லை காரணமாக தாய் – மகன் கிணற்றில் குதித்துஉயிரை மாய்த்துக் கொண்டு உள்ள சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் சமுத்திரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாந்திராஜ் – மீரா தம்பதியினர். இவர்களுக்கு தேவகுமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஆடிமாதம் குலதெய்வம் வழிபாடு செய்வதற்கு போளூர் அருகே உள்ள மண்டகொளத்தூர் கிராமத்தில் இருக்கும் பட்டணம்காத்த அம்மன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். முன்னதாக கடன் தொல்லையால் அவதியுற்று வந்த அவர்கள் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு அருகில் இருந்த விவசாய கிணற்றின் அருகே கடன் தொல்லையால் நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம் என்று எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.
வழக்கம்போல் நிலத்தின் உரிமையாளர் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றின் அருகே சென்றபோது கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவலளித்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மீரா, மற்றும் மகன் தேவகுமாரின் உடலை மீட்டனர். ஆனால், பல மணி தேடலுக்கும் பின்னரும் சாந்திராஜின் உடல் கிடைக்காததால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








