சென்னையை அடுத்த பாடி அருகே, குடும்ப தகராறு காரணமாக தாயும் மகளும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி கலைவாணர் நகர் இயேசுநாதர் தெருவை சேர்ந்தவர் அசோக் ராஜபாண்டி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். பாடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் அசோக் ராஜபாண்டி நேற்று மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மனைவியும் மகளும் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு தாய் மற்றும் மகளை உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்த நிலையில், ராஜலட்சுமி தனது மகளுடன்உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.







