புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கும் முடிவை துணைநிலை ஆளுநர் தமிழிசை கைவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வரும் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் விநாயகர் சிலை பொது இடங்களில் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை. உரியப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனாவின் மூன்றாவது அலை குறித்து அச்சப்பட்டு வரும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கலாம், விழாக்களை நடத்தலாம் என்ற துணைநிலை ஆளுநரின் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். விநாயகர் ஊர்வலகங்கள் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது போல புதுச்சேரி மாநிலத்திலும் அதை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போவதாகவும், துணை நிலை ஆளுநரின் உத்தரவை மறு பரிசிலனை செய்ய வேண்டும் எனவும் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், மக்கள் எதிர்ப்பார்த்த எதுவும் அதில் இல்லை என தெரிவித்தார்.







