ஐபிஎல் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரன் அதிக விலைக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது.
16-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரனை ஏலம் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. சாம் கரனின் ஆரம்ப விலை ரூ.2 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன் பெயர் எப்போது வரும் என அனைத்து அணிகளும் காத்திருந்தன.
அப்போது சாம் கரனின் பெயர் வந்ததும் அனைத்து அணிகளும் ஏலத்தில் குதித்தன. மும்பை, சென்னை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சாம்கரணை எடுக்க ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தபோது பஞ்சாப் அணியும் போட்டியில் இறங்கியது. இதனால் போட்டி மிகவும் கடுமையானது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.50 கோடிக்கு சாம் கரனை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கு சாம் கரன் சொந்தக்காரரானார்







