மூணார் அருகே படையப்பா யானை தேயிலை ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தியதால் பொதுமக்கள் விநாயகா, கணபதியே என அழைத்து அமைதியாகச் செல்லுமாறு வலியுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மூணார் அருகே படையப்பா யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அலைந்து வருகிறது. சில சமயம் அந்த யானை அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் மட்டும் உணவு தேடி செல்வதால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கூடார் விழா எஸ்டேட்டில் இருந்து தேயிலைகளை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது உணவு தேடி படையப்பா யானையும் அதே சாலையில் உலா வந்தது. டிராக்டர் வருவதை கண்ட யானை அதனை வழி மறித்து முற்றுகையிட்டு நின்றது.
அந்த யானையைக் கண்டதும் அச்சமடைந்த டிராக்டர் ஓட்டுநர் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். டிராக்டரை நோக்கி வந்த படையப்பா யானை வாகனத்தில் உள்ளே உணவு உள்ளதா என சிறிது நேரம் ஆராய்ந்து பின்னர் அங்கிருந்து அமைதியாக மீண்டும் வனப்பகுதியினுள் சென்று விட்டது. இது ஒரு புறம் இருக்க யானை டிராக்டர் முன்பு நின்று கொண்டிருந்தபோது அந்த ஓட்டுனரும் மேலும் சிலரும் யானையிடம் விநாயகா, கணபதியே, ஐயப்பா என அழைத்து அமைதியாக செல்லுமாறு வலியுறுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் படையப்பா யானை அங்கிருந்து அமைதியாக வனப் பகுதியினுள் சென்றது. படையப்பா யானையிடம் பொதுமக்கள் வேண்டிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ரெ.வீரம்மாதேவி







