அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகள் கூடுதலாக இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார் எனவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார் எனவும், அவருக்கு கட்டாயமாக விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும், காவேரி மருத்துவமனையில் ஸ்டண்ட் கருவி பொருத்துவதற்கான ஆலோசனைகளையும் ஓமந்தூரர் மருத்துவர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை கைதியாக நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றிலும் ஏராளமான ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும், விசாரணைக் கைதியாக உள்ள செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதால், அவரை பார்வையாளர்கள் பார்க்க அனுமதி இல்லை. இருப்பினும், அவ்வாறு அவரை பார்க்க வேண்டும் என்றால், சிறைத் துறை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்புதான் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய துறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இரு அமைச்சர்களுக்கு அவர் கவனித்து வரும் துறைகளை அளிப்பது குறித்து அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக நேற்றே நியூஸ் 7 தமிழ் தெரிவித்தது.
இந்தநிலையில், வீட்டு வசதித் துறையை கவனிக்கும் அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை கூடுதலாக ஒப்படைக்கவும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய துறைகள் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.







