குரங்கம்மை நோய்க்கு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மிகவும் நன்றாக இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே மருத்துவமனையில் ஓய்வில் இருக்கிறார் என்றும் கூறினார்.
” ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கம்மை தாக்கம் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் 10,12 நாடுகளிலேயே இருந்தது. இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2 ம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது என்றார். தமிழ்நாடு கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் இருக்கிறதா? என ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் 1லட்சத்து 153 பயணியர் வருகை தந்துள்ளதாகவும், அதில் 1987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர் . 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வீடுகளில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்…

சென்னையில் குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராகியுள்ளது. தமிழகத்தில் மாவட்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் , தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது, இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை. தற்போதைய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஆவடி நாசருக்கும் அண்மையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்த மா.சுப்பிரமணியன், ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா இருக்கிறதா என அதிகாரபூர்வமாக தனக்கு தெரியாது என்றார். தொற்று தற்போது அரசியல்வாதிகளுக்கு மட்டும் வருவதாக கூற முடியாது பலருக்கும் வேகமாக பரவுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் 40 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் , குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும் , அந்த சூழல் தற்போது இல்லை என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







