புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அவரது தாய் மொட்டையடித்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
பிரேசிலை சேர்ந்தவர் லூசியானா ரெபெல்லோ. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், லூசியானா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் லூசியானாவுக்கு அவரது தாய் மொட்டையடித்து கொண்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதம் லூசியானாவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக அவரது தாய் தனக்கு தானே மொட்டையடித்து கொள்கிறார். இந்த செயல் வீடியோ பார்ப்பவர்கள் அனைவருக்கும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து அந்த வீடியோவை குட்நியூஸ்கோர்ஸ் எனும் டிவிட்டர் பக்கம், “யாரும் தனியாக வாழ்க்கையில் போராடுவதில்லை. ஒற்றுமையுடன் தனது முடியையும் மொட்டையடித்து தனது மகளை அந்த தாய் ஆச்சர்யப்படுத்தினார். ஒரு தாயின் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை” என பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.







