பத்திரிகையாளர் முகம்மது சுபைர் நாளை மறுநாள் நேரில் ஆஜராக உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும், ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான முகம்மது சுபைருக்கு எதிராக டெல்லி, ராய்ப்பூர், உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜகதீஷ் சிங் என்பவரின் பேத்தியின் படத்தை சமூக ஊடகங்களில் அவதூரான நோக்கத்துடன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக முகம்மது சுபைருக்கு எதிராக டெல்லி மற்றும் ராய்ப்பூரில் வழக்குப் பதியப்பட்டது. இவ்விரு வழக்கிலும் கைது செய்யப்படாமல் இருக்க டெல்லி உயர்நீதிமன்றத்திலும், ராய்ப்பூர் உயர்நீதிமன்றத்திலும் சுபைர் தடை உத்தரவு பெற்றுள்ளார்.
மகந்த் பஜ்ரங் முனி, யதி நரசிங்கானந்த், சுவாமி ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை வெறுப்பை பரப்புபவர்கள் என முகம்மது சுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் நோக்கம் கொண்டது என அவருக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரில் வழக்குப் பதியப்பட்டது. மத உணர்வை புண்படுத்தும்படி நடந்து கொண்டது, சமூக ஊடகத்தில் ஆட்சேபத்துக்குரிய ஒன்றை பதிவிடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றில் முகம்மது நபி குறித்து அவதூறாக பேசியதன் வீடியோ காட்சியை, முகம்மது சுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது பகிர்வை அடுத்தே, அந்த வீடியோ இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பரவத் தொடங்கியதாக நுபர் ஷர்மா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், ராமபக்தராகவும் கடவுளாகவும் போற்றப்படும் ஆஞ்சநேயர் குறித்து அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக டெல்லி போலீசார் முகம்மது சுபைரை கடந்த ஜூன் 27ம் தேதி கைது செய்தனர்.
சீதாபூர் வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை தனக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரியும், தம்மை ஜாமினில் விடுவிக்கக் கோரியும் முகம்மது சுபைர் தாக்கல் செய்த மனுவை சீதாபூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்தவழக்கில், முகம்மது சுபைருக்கு 5 நாட்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனை ஜாமீன் இந்த ஒரு வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என கூறி இருந்தனர்.
இந்நிலையில், முகம்மது சுபைருக்கு எதிராக சுதர்சன் நியூஸ் பணியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சிறையில் உள்ள முகம்மது சுபைருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராக லக்கிம்பூர் கெரி நீதிமன்றம் முகம்மதுசுபைருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.