கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் எந்த கேரண்டியும் இல்லை என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச்சுவர் நேற்று இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இந்தச் சுவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வெறும் 6 மாதங்கள்தான் ஆகின்றன. ஆறே மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும்போதே இடிந்து விழும் மருத்துவமனை, திறப்பு விழாவின்போதே நொறுங்கும் மினி கிளினிக் சுவர் என்று தொடரும் டெண்டர் அரசின் சாதனைப் பட்டியலில் கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
ஆயிரம் ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஒரு வருடம் வாரண்டி இருக்கிறது. கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை என்று கேள்வி எழுப்பிய அவர், அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில், அழகுப்படுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம் சுரண்டல்தான் என்பதன் சாட்சியே சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் என்று விமர்சித்தார்.
மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனதுதான் என்றாலும் குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை உதவும்” எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.