“தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாப்பட்டினம் மாவட்டத்தில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரது அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மண்பானையில் பொங்கல் வைத்து ,பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களோடு சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் அவர்களும் கலந்துகொண்டு, தமிழகம் என உச்சரிக்க கூறிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வாழ்க, தமிழ் வாழ்க என முழக்கமிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழர் அடையாளம், பண்பாடு, தமிழ்நாட்டின் பெயர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படும் சூழலில், தமிழர் பண்பாட்டை தூக்கி நிறுத்தக்கூடிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழர் பண்பாட்டை அரசியல் ஆக்கிவிட்டார்கள், தமிழ்நாடு என்று உச்சரிக்கவே மறுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழர் அடையாளங்களை மீண்டும் மீண்டும் உயர்த்தி பிடிக்க வேண்டும். தமிழ்நாடு வாழ்க என்பது பெரும் முழக்கமாக மாறியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை மீறி எஸ்பிஐ வங்கி தேர்வு நடந்துவதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பலர் குரல் கொடுத்தும் எஸ்பிஐ வங்கி தேர்வை நடத்தி கடைசி வரை ஒன்றிய அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து உள்ளது என்று கடுமையாக சாடினார். கேரளா மாநில ஓனம் பண்டிகை அன்று தேர்வு நடக்குமா? வடமாநில தசரா பண்டிகை அன்று தேர்வு நடக்குமா? என்று கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஒரு மாநிலத்தில் நடக்கும் பண்பாட்டு விழாவின்போது தேர்வு
நடத்தியது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.