முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் ஆசிபெற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நேராக தலைமை செயலகம் சென்ற அவர், முதலமைச்சருக்கான இருக்கையில் அமர்ந்தார். அங்கு கொரோனா நிவாரணம் ரூ.4000 உட்பட ஐந்து கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இருந்து சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்.பியின் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவரை கனிமொழி எம்.பி. வாசலில் நின்று வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.







