காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தகுமார் தனது விலை உயர்ந்த பேனா மாயமானதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலுக்காக ஆதரவு திரட்டுவதற்காக எதிர்க்கட்சி வேட்பாளாரான யஷ்வந்த் சின்ஹா கடந்த ஜூன் 30ம் தேதி சென்னைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, அவரை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்தகுமார் சந்தித்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பேனா மாயமாகியுள்ளது. குறிப்பாக தனது தந்தையும், மறைந்த வசந்த் அண்ட் கோ வின் நிறுவனர் வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால், தந்தையின் நினைவாக உள்ள அந்த பேனாவை கண்டுபிடிப்பதற்காக புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்காவை பல அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும் போது நடந்த முக்கிய கூட்டத்தில் மாயமானதால் நட்சத்திர ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பேனாவை தேடுவதற்கு புகார் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிண்டி காவல் நிலையத்தில் விஜய் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பேனாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பேனா வெள்ளியாலான, தங்க நிப்புகள் பொருத்தப்பட்ட விலை உயர்ந்த பேனா என்பது குறிப்பிடத்தக்கது