படப்பிடிப்பின்போது கொரோனா விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை என்று கூறி, போலீசார் வழக்குப் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல மலையாள இளம் ஹீரோ டோவினோ தாமஸ். ‘மாயநதி’, ‘ஃபாரன்சிக்’, ‘தீவண்டி’, ‘வைரஸ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ள இவர் தமிழில், தனுஷ் நடித்த ’மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் இப்போது பசில் ஜோசப் இயக்கும் மின்னல் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். பசில் ஜோசப், ‘குஞ்சிராமாயணம்’,‘கோதா’ ஆகிய படங்களை இயக்கியவர். ’மின்னல் முரளி’, மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என 5 இந்திய மொழிகளில் உருவாகிறது.
அஜூ வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப் போனது. கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இதன் ஷூட்டிங் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இது கோவிட் அதிகமுள்ள பகுதி என்பதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை, முறைப்படி கடைபிடிக்காமலும் அனுமதி பெறாமலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு நடந்தப் படப்பிடிப்பை நிறுத்தினர். பின்னர் அந்த படக்குழு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.








