பேருந்து கட்டணம் உயர்வதாக எழுந்த விவாதம் தொடர்பாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உயர்ந்து வரும் எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்து கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. எனவே மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்களை பாதிக்காத கட்டண உயர்வு என்பது பொய் என்றும், அது கண்டிப்பாக மக்களை பாதிக்கும் எனவும் என்றும் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள இந்நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது எனக் குறிப்பிட்ட பாமக எம்.பி அன்புமணி, கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த தகவலில், “பேருந்து கட்டண உயர்வை பற்றிய எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் பேருந்து கட்டண உயர்வதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன.அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன்.
இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் கட்டணம் உயர்த்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும். கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, “தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது” என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.தமிழக பெண்கள் நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற மகத்தான திட்டத்தை வழங்கி, அது சிறப்புற செயல்படுத்தப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்று வரை கடந்த ஓராண்டில்,112 கோடி இலவச பயணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கான நிதியை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு பாதிக்காத வண்ணம் கட்டண உயர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், “கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டது” என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.