அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, முகுல் ரோஹத்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்ட விரோதமானது, செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பன உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் உள்ள நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி தீர்ப்பளித்த நீதிபதி ஜெ. நிஷா பானு “ மேகலாவின் மனு விசாரணக்கு உகந்ததே. அதனால் ஆட்கொணர்வு ஏற்கப்படுகிறது. செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்கலாம். நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதம் என்பதால் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பினை வாசித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி ” ஆட்கொணர்வு மனுவில் நீதிபதி நிஷாபானு கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டப் பிறகு இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூறமுடியாது. அதனால் மேகலாவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என தெரிவித்தார்.

மேலும் “ நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம். அதன் பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது.” என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.

மேகலா தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மூன்றாவதாக ஒரு நீதிபதி விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.