உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஜூன் மாதம் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக இடது காலில் நரம்பு எடுக்கப்பட்டிருந்த நிலையில், காலில் உணர்வு மரத்துப் போகும் நிலை அடிக்கடி உருவாவதால், இன்று மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கால் மரத்து போகும் நேரத்தில் மூச்சு திணறல் மற்றும் ECG அளவீடுகளில் வேறுபாடுகள் இருப்பதாகவும், சிறிது நேரம் கூட அமர முடியாத நிலை உருவாவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பைபாஸ் அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகளாக இருக்குமா என ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். விரைவில் அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







