திருக்கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், 2021 – 2022 மற்றும் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்புகளின்படி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டு வரும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள், மனநலக் காப்பகம் அமைக்கும் பணிகள், சின்னமலை அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயில் திருப்பணிகள் குறித்தும்,
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிர்வாக பயிற்சி மையம், திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள், புதிய மாற்றுப் பாதை அமைத்தல், சரவண பொய்கை திருக்குளத் திருப்பணி, இராஜகோபுரத்தை தேர்வீதியுடன் இணைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், அன்னதானத் திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்குத் திருப்பணிகள், வணிக வளாகம் கட்டுதல், பசுமடம் மேம்பாட்டு பணிகள், அன்னதானக் கூடப் பசுமை எரிவாயு திட்டப் பணிகள் மற்றும் யானை மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், பல்நோக்கு மண்டபம் ஆகிய கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பொறியாளர்களும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், எம்.கவிதா, சி.ஹரிப்ரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா








