சட்டப்பேரவையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நபார்டு வங்கி உதவியுடன் 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மயிலாடுதுறை மற்றும் தேனி மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.25 கோடி மதிப்பில், நவீன அரிசி ஆலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படும் எனக்கூறிய அமைச்சர் சக்கரபாணி, உணவுப் பொருள் வழங்கல் துறை, நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, திருச்சி, கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.20 கோடி செலவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு வாணிப கழகம் அமைக்கப்படும் எனக்கூறிய உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என உறுதி அளித்தார்.