28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் விளையாட்டு

மெஸ்ஸி vs எம்பாப்பே – கோப்பையை வெல்லப்போகும் கோமகன் யார்?


பரணி ரவிச்சந்திரன்

கட்டுரையாளர்

கால்பந்து விளையாட்டின் முன்னணி நட்சத்திரங்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸின் கிளியன் எம்பாப்பே குறித்து விரிவாக பார்க்கலாம். 

தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக கருதப்பட்ட ஒரு நட்சத்திரம், 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஒட்டுமொத்த தேசத்தின் கனவுகளோடு அர்ஜெண்டினாவுடன் களம் கண்டது . பிரேசிலில் நடந்த அந்த உலகக்கோப்பையில் போஸ்னியா அணியுடனான முதல் போட்டியில், 3 வீரர்களை கடந்து அந்த நட்சத்திரம் அடித்த கோல், அர்ஜெண்டினா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. மெஸ்ஸி எனும் துருவ நட்சத்திரம் தான் அது…

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டாவது போட்டியில் ஈரானுடன் கடுமையாக போராடினாலும், 3வது போட்டியில் நைஜீரியா, சுவிட்சர்லாந்து உடனான ரவுண்ட் ஆஃப் 16 போட்டி என, மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் வெற்றி கண்ட அர்ஜெண்டினா, காலிறுதியில் பெல்ஜியத்தை கிரங்கடித்தது. இதன் மூலம் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக அர்ஜெண்டினாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் லியோனல் மெஸ்ஸி.

பரபரப்பான அந்த அரையிறுதி போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்தை வென்றது அர்ஜெண்டினா. அர்ஜெண்டினாவின் 28 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் அந்த நாளும் வந்தது. பிரேசிலை அதன் சொந்த மண்ணிலேயே பந்தாடிய ஜெர்மனியுடன் மல்லுக்கட்டிய அர்ஜெண்டினா, ஆட்டத்தை கூடுதல் நேரம் வரை எடுத்து சென்றது. அப்போது சப்ஸ்டிடியூட்டாக வந்த ஜெர்மனியின் மரியோ கோட்ஸே, அர்ஜெண்டினாவுக்கு எமனாக மாறினார்.

113வது நிமிடத்தில் அவர் அடித்த கோல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை கனவை சுக்கு நூறாக்கியது. நொறுங்கிய இதயத்துடன் வெளியேறியது அர்ஜெண்டினா. தனது ஒப்பற்ற திறமையால் அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற மெஸ்ஸிக்கு அத்தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பையை வெல்வதையே வாழ்நாள் லட்சியமாய் கொண்டிருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த தொடரில் அது சாத்தியமாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.

எல்லா பக்கத்தின் முடிவிலும், முற்றுப்புள்ளி என்பது எப்போதும் முடிவல்ல. அது அடுத்த பக்கத்தின் தொடக்கம் என்பதே நிதர்சனமான உண்மை. 18 வயதினில், இளம் பருவத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கொடுத்து ஒரு அணியில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அளவுக்கு, ஒருவரிடம் என்ன இருக்கிறது என பல கேள்விகள் ஒரு நாள் எழுந்தன. அப்போது தான் 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பையும் வந்தது.

தான் யார் என்பதை கால்பந்து உலகுக்கு நிரூபித்தார் அந்த இளம் நட்சத்திரம். புயலென வேகம், எதிரணி வீரர்களை கதிகலங்க வைக்கும் dribbling திறன், துல்லியமாக கோல் அடிக்கும் யுக்தி என ஒரு நவீன கால்பந்து வீரருக்கான அத்தனை திறன்களும் அவரிடம் நிரம்பியிருந்தன. ஆம் அதுதான் கிளியன் எம்பாப்பே எனும் தொடக்கப் புள்ளி.

அர்ஜெண்டினாவுக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் அவர் ஆடிய பேயாட்டம், மெஸ்ஸியின் அணியை தொடரில் இருந்தே வெளியேற்றியது. இறுதிப்போட்டியில் குரோஷியா அணிக்கு எதிராக சுமார் 25 அடி தூரத்தில் இருந்து அவர் அடித்த கோல், பிரான்ஸ் அணி கோப்பையை முத்தமிட வைத்தது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த இளம் வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் பீலேவுடன் அவரது பெயரும் சேர்ந்தது.

2018-ல் பல கேள்விகளுக்கு மத்தியில் விடை கொடுத்த கிளியன் எம்பாப்பே, தற்போது அஸ்தமனமான பல சூரியன்களின் மறு உதயமாக உருவெடுத்து வருகிறார். காலம் காலமாய் போற்றும் நட்சத்திரங்களின் வரிசையில் வரும்காலம் நோக்கிய கனவோடு பிரான்ஸ் நாயகன் கிளியன் எம்பாப்பே.

இரு பக்கத்தின் பலமும் உச்சத்தை தொட்டிருக்க, இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை தழுவப் போவது யார் என்ற கேள்வி கால்பந்து ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், வெல்லப் போவது மெஸ்ஸியின் மேஜிக்கா? எம்பாப்பேவின் மேஜிக்கா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy