கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், இறுதிப்போட்டியில் மோதவுள்ள அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி கடந்த வந்த பாதை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு உலகக்கோப்பையில் காலடி எடுத்து வைத்த அர்ஜெண்டினாவின் மமதைக்கு முடிவு கட்டியது கத்துக்குட்டியான சவுதி அரேபியா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அர்ஜெண்டினாவின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, அந்த அணி குரூப் சுற்றிலேயே வெளியேறும் என்பதே விமர்சகர்களின் கருத்தாகவும் இருந்தது. அந்த கணிப்புகளை பொய்யாக்கிய மெஸ்ஸியின் படை, மெக்சிகோ, போலந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் மீண்டும் மெஸ்ஸி மேஜிக்கால் வெற்றி கண்ட அர்ஜெண்டினா காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை சந்தித்தது. தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு குறைவில்லாத இந்த போட்டியில் பெனால்டிஷூட் அவுட் வரை சென்று நெதர்லாந்தை வீழ்த்தியது அர்ஜெண்டினா. அரையிறுதியில் மெஸ்ஸி, ஆல்வரெஸ் ஆகியோரது அபார ஆட்டத்திற்கு ஈடு கொடுக்காமல் அடி பணிந்தது லூக்கா மோட்ரிச்சின் குரோஷியா அணி.
ஆஸ்திரேலியா, டென்மார்க் அணிகளை வீழ்த்தி அபார வெற்றியுடன் தொடங்கிய பிரான்ஸ் அணிக்கு 3வது போட்டியில் அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய உத்வேகத்தில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளித்து புதிய அணியை களமிறக்கிய பிரான்ஸை தோற்கடித்து எச்சரிக்கை மணி அடித்தது துனிசியா.
ரவுண்ட் ஆப் 16-ல் புது உத்வேகத்துடன் வந்த பிரான்ஸ், போலந்து அணியை அதன் சொந்த ஊருக்கே அனுப்பிவைத்தது. ஆனால், காலிறுதியில் தான் உலக சாம்பியனுக்கு பெரும் சவால் காத்திருந்தது. இந்த உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இங்கிலாந்துடன் போராடி வென்றது பிரான்ஸ். அரையிறுதியில், தடுப்பாட்டத்தில் சிறந்த மொராக்கோவை எளிதில் வீழ்த்தி அசத்தல் வெற்றியை பெற்றது பிரான்ஸ் அணி.
தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்குள் முன்னேறிய பிரான்ஸ் அணி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை தக்கவைத்த அணி என்ற வரலாறு படைக்க காத்திருக்கிறது. மறுபுறம், மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை போட்டியில், 36 ஆண்டுக்குப் பிறகு கோப்பையை வென்று அவருக்கு அர்ப்பணிக்கும் உறுதியோடு களம் காண்கிறது அர்ஜெண்டினா.
இதனால், லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டி, அனல் பறக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.