தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 75 லட்சம்
பேருக்கு அவர்களுடைய வீடுகளுக்கே தேடிச் சென்று மருத்துவப் பெட்டகம்
வழங்கப்பட்டிருப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
திமுக அரசு மலைக் கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சர்வதேச யோகா தின விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. சூரமங்கலம் பகுதியில்
நடைபெற்ற யோகா தின விழாவில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு கல்லூரி மாணவ-மாணவியருடன் இணைந்து யோகப் பயிற்சியில் ஈடுபட்டார். இதில் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். இதில் சுவாசப் பயிற்சி, சர்வாங்காசனம், உத்தன்படாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான யோகாசனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அனைவரும் அரைமணி நேரத்திற்கும் மேலாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் கடைக்கோடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் சுகாதார சேவை
கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சாலை வசதி இல்லாத, எளிதில் செல்ல முடியாத மலை
கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவச் சேவை கிடைப்பதை மக்களைத்
தேடி மருத்துவம் திட்டம் உறுதி செய்திருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம்
திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவப் பெட்டகம்
வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சென்றிடாத மலை
கிராமங்களுக்கும் மருத்துவச் சேவை தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில்
கிடைத்து வருகிறது.
நாள்தோறும் காலை நேரங்களில் நமக்கான நேரமாக ஒதுக்கிக் கொண்டு உடற்பயிற்சி
மேற்கொண்டு உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடற்பயிற்சி என்பதை
நாள்தோறும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். சரியான வயதில் தொடங்கும் யோகப்
பயிற்சி வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.