மதிமுக இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து ம.தி.மு.கவில் பணியாற்றி வந்தேன். கட்சியில் பல பொறுப்புகளில் சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். பெருந்துறை இடைத்தேர்தல் முதல், கடைசியாக பல்லடம் சட்டமன்ற தேர்தல்வரை அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளேன். தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக, எனது சட்டப்போராட்டத்தின் மூலமாக கோவையில் 10,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இது தான் நான் செய்த பெரிய சாதனையாக கருதுகிறேன்.
எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும்,ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும்,மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை மனநிறைவையே தந்துள்ளது. ஆனாலும் அரசியலிலும்,சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை கோபம் கொள்ள செய்கிறது. இதனை மாற்றவேண்டும் அல்லது தீர்வுகாண வேண்டும் என்று நினைத்தாலும் ஓர் அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய இயலவில்லை.
எனது வாழ்நாளில் என் மனதில் நினைக்கும் பல அரசியல்,சமூக மாற்றங்களை உருவாக்க நான் சிறு முயற்சியாவது மேற்க்கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல, ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்.
நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்துவிட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. எந்த காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக் கொள்ள இயலவில்லை. எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது. அதனால், ம.தி.மு.கவில் இருந்து விலகிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.