கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, மதிப்பீட்டு முறையில் மதிப்பெண் வழங்கப்படுவதை விரும்பாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறினார்.
கொரோனா தொற்று பரவல் முற்றிலும் முடிவடைந்த பிறகே அத்தகைய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்ளாத அளவுக்கு தேர்வு முடிவுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விடும் என்றும் அனுராக் திரிபாதி நம்பிக்கை தெரிவித்தார்.







