டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள், பதக்கம் வழங்கும் விழாவின்போது சீன கம்யூனிச தலைவர் மாவோவின் உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்திருந்த சம்பவத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், இன்றுடன் நிறைவு பெறவுள்ளன. பதக்கப்பட்டியலில் சீனாவும் அமெரிக்காவும் முதலிடத்திற்கான போட்டியில் உள்ளன.
இந்நிலையில், சைக்கிள் பந்தயச் சுற்றில் பங்கேற்ற சீன வீராங்கனைகள் Bao Shanju மற்றும் Zhong Tianshi ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்றனர்.
பதக்கம் வழங்கும் விழாவின்போது அவர்கள் இருவரும் தங்கள் உடையில், சீன கம்யூனிச தலைவர் மாவோவின் உருவம் பொறித்த பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீன ஒலிம்பிக் கமிட்டிக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீன வீராங்கனைகளின் இந்த செயல் ஒலிம்பிக் விதிகளை மீறும் வகையில் உள்ளதாகக் கூறிய சர்வதேச ஒலிம்பிக் சங்கம், எந்தவொரு மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த பிரசாரங்களை ஒலிம்பிக் அரங்கில் மேற்கொள்வதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.









