நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குட்செட் பகுதியில் 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டட வேலைக்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தர்மதுரை, தங்கவேல் ஆகிய இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். அப்போது தர்மதுரை தனது நண்பன் தங்கவேலுவிடம் மது வாங்குவதற்காக 100 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது தங்கவேல் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தர்மதுரை தனது நண்பர் தங்கவேலை தோசைக் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட நீதிபதி, குற்றவாளி தர்மதுரைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.







