தேர்தல் பரப்புரைக்குத் தடை: போராட்டத்தைத் தொடங்கிய மமதா பானர்ஜி

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று போராட்டத்தைத் தொடங்கி உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மேற்கு…

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று போராட்டத்தைத் தொடங்கி உள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மத நல்லிணக்கத்திற்கு எதிராகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் மமதா பானர்ஜி மீது நேற்று நடவடிக்கை எடுத்தது.

நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இந்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இதுபோன்று மமதா பானர்ஜி வரும் காலங்களில் பேசக்கூடாது என்று எச்சரித்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்று விமர்சித்த மமதா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள காந்தி முர்த்தி பகுதியில் போராட்டம் நடத்துவேன் என்று நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் காந்தி முர்த்தி பகுதியில் அவர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளார். மேலும் திமுக எம்பி ஆ. ராசாவும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களுக்குத் தடை விதித்தது. இதுதொடர்பாக அவர் மேல் முறையீடு செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.