இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சுவைமிக்க விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன், வெளியான நாள் முதலே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள திரையரங்கில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது மனைவியுடன் சென்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துள்ளார். அவருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.