மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்த பிறகு பதவியேற்ற, ஷிண்டே-ஃபட்னாவிஸ் கூட்டணி இன்று தனது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தது.
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வரும், மாநில நிதியமைச்சருமான தேவேந்திர
ஃபட்னாவிஸ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் முதன்மையான PM-KISAN திட்டத்தின் படி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6,000 ரூபாய் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார். இதற்காக 6,900 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கான செலவை அரசே ஏற்கும் என்றும், இதன் மூலம் 1.15 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தவிர மகாராஷ்டிர பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
1. தற்கொலையால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் தானியங்களுக்குப் பதிலாக ஆண்டுக்கு ரூ.1800 ரொக்கமாக கொடுக்கப்படும்.
2. பருவ மழை மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை மதிப்பிட ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் e-pachnama நடத்தப்படும்.
3. மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. நான்காவது விரிவாக்கப்பட்ட மகளிர் கொள்கை அடிப்படையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் போது ரூ.75,000 வழங்கப்படும்.
5. மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் போக்குவரத்துப் பயணத்தில் பெண்களுக்கு 5.50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்
6. இனி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கல்விக்காக மானியம் வழங்கப்படும்.
7. மாநிலம் முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக 50 புதிய விடுதிகள் தொடங்கப்படும்.
8. அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியத்தை ரூ. 8,300ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தற்போதுள்ள ரூ. 4425 ஊதியம் ரூ. 5500 ஆகவும் உயர்த்தப்படும்.
9. ”மகாத்மா பூலே ஜீவாந்தயீ யோஜனா” திட்டத்தின் கீழ் BPL குடும்பங்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அதே திட்டத்தின் கீழ் ஒரு நோயாளி ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையைப் பெற முடியும்.
10. ”மோடி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 12,000 கோடி ரூபாய் செலவில் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் கட்டப்படும். அவற்றில் மூன்று லட்சம் வீடுகள் 2023-24-க்குள் கட்டி முடிக்கப்படும்.
10. மகாராஷ்டிராவில் ஆட்டோரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான நல வாரியம் தொடங்கப்படும்.
11. நாக்பூரில் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு தளவாட மையம் உருவாக்கப்படும்.
12. மும்பை பெருநகரப் பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள 337 கிமீ மெட்ரோ நெட்வொர்க்கில், ஏற்கனவே 46 கிமீ மெட்ரோ பாதைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டு 50 கிமீ பாதைகள் கூடுதலாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- பி.ஜேம்ஸ் லிசா