மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை. இதனை காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றூலா பயணிகள் வருவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஜனவரி 14,15,16ம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பயிற்சிகளை காளை உரிமையாளர்கள் தற்போது துவக்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் காளைகளுக்கான பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாக வாரத்திற்கு ஒருநாள் காளைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தற்போது வாரத்திற்கு 3 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. வலுவான கால்களுக்காக தினந்தோறும் 2 கிலோ மீட்டர் வரை நடைப்பயிற்சியும், கழுத்து, கொம்பு வலுப்பெற மண் குத்தும் பயிற்சியும், நீண்ட தூரம் மூச்சை அடக்கி ஒட நீச்சல் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
ஜல்லிகட்டில் வெற்றி பெற பயிற்சிகள் ஒருபக்கம் வழங்கப்படு வரும் நிலையில் வழக்கமான மேய்ச்சல் தவிர குருனை தூசி, பருத்தி விதை, வைக்கோல் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் காளைகளுக்கு வழங்கப்படுகின்றது. இப்படி வழங்கப்படும் சிறப்பு உணவுகளால் காளைகள் உடல் பெருத்துவிடக்கூடாது என்பதற்காக பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதாக காளை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வாரம் 3 நாட்கள் என வழங்கப்படும் ஜல்லிக்கட்டு பயிற்சிகள் போட்டிக்கு 5 நாட்களுக்கு முன் நிறுத்தப்படும் என தெரிவித்த காளை உரிமையாளர்கள் அதன் பின் காளைகளுக்கு ஓய்வு வழங்கப்படும் எனவும் அதுவே காளைகளுக்கு களத்தில் சிறப்பாக விளையாட ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். அதற்காக காளைகளுக்கு வாடிவாசல் அமைத்து சிறப்புப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
காளை எத்தகைய குணம் கொண்டது, மனிதரை குத்துமா என்பதுலாம் வாடிவாசலில் களமிறக்கப்படும் போதுதான் தெரியவரும் எனக்கூறிய காளை உரிமையாளர்கள், மனிதரை தாக்குவதற்காக காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் எதுவும் வழங்கப்படுவது இல்லை என்றும் கூறினர்.