மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, சிகிச்சைக்காக சென்ற இடத்தில் போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடிவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த பத்மேஸ்வரன் என்பவர் கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலனுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். பினனர் அவரை கைது செய்த போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவரது 2 கால்களில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை எலும்பு மூட்டு பிரிவில் சிகிச்சை அளிக்க மதுரை மாநகர ஆயுதப்படை காவல்துறையினர் பத்மேஸ்வரனை அழைத்து சென்றனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக காவல்துறையினரை ஏமாற்றி பத்மேஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். அவர் மீது 11 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பத்மேஸ்வரன் தப்பி ஓடியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








