மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் – சுற்றுசூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம்…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது. 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்று சுவர்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு இருந்த நிலையில் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளபடாமல் இருந்தது.

இதற்கிடையே நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17 மாதம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. எல் அன்ட் டி நிறுவனம் இதற்கான டெண்டரை எடுத்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளை எல் அன்ட் டி நிறுவனம் தொடங்கியது. இதனையடுத்து சுற்றுசூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு “தற்போது நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளும், விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் கட்டுமானத்திற்கு முந்தைய செயல்பாடுகள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்நாடு அரசிடம் (GoTN) சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. மே 2ஆம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து மே 10 அன்று இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில்,  தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.