போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.…

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் நடிகர் தனுஷ் தனது மகன் என்றும், வயது முதிர்வின் காரணமாக தனக்கும், தனது மனைவி மீனாட்சிக்கும் மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை எதிர்த்து, அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், இருதரப்பினரும் தனுஷின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். விசாரணையின் இறுதியில் கதிரேசன், மீனாட்சி தம்பதி வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தனுஷுக்கு எதிராக மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நடிகர் தனுஷ் தனது மகன்தான் என மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கில், போலியான பிறப்பு மற்றும் பள்ளிச் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.